Thursday, December 15, 2011

லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி


டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

திரிபோலி:புரட்சிக்கு பிந்தைய லிபியாவில் கலந்தாலோசித்தல், ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் சட்டம் அமுலுக்கு வர லிபியாவின் குடிமக்கள் முயற்சிக்க வேண்டும் என சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை தலைவரான ஷேக் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லிபியாவின் புரட்சி கவுன்சில் மற்றும் மார்க்க அறிஞர்களின் அழைப்பை ஏற்று லிபியாவிற்கு சென்ற ஷேக் கர்தாவி பெங்காசியில் அமைந்துள்ள மஸ்ஜித் பாப் அஜ்யாஸில் நடத்திய ஜும்ஆ பேருரையிலும், லிபர்டி அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேலும் அவர் கூறியதாவது: சிவிலியன்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இஸ்லாம் கற்று தந்துள்ள முறையில் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். கத்தாஃபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததன் பலன் தேசத்திற்கு கிடைக்க வேண்டுமெனில் விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு வழங்குதல் கலாச்சாரத்தை கடைப்பிடிக்க அனைவரும் தயாராக வேண்டும்.
பொதுத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பை அளிக்க வேண்டும். புரட்சியின் காலக்கட்டத்தில் தியாகத்தின் முன்மாதிரியாக திகழ்ந்த மக்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு கர்தாவி உரையில் குறிப்பிட்டார்.
கர்தாவியின் லிபியா சுற்றுப்பயணம் அரசியல் நோக்கமுடையது எனவும், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்திற்கு பலம் சேர்ப்பதற்கு என்றும் பரப்புரை செய்வது தவறு என மார்க்க அறிஞர்கள் குழுவின் தலைவர் கைஸ் அல் ஃபாகிரியும் பிரச்சார குழுவின் தலைவர் வனீஸ் மப்ரூக் அல் ஃபாஸியும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment