கரூர்: கரூர் மாவட்டத்தில் நேர்மையாக பணியாற்றிய ஆர்.டி.ஓ. சாந்தி திடீர் என்று உசிலம்பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி, குடனகாறு போன்ற நதிகளில் இருந்து மணல் திருடிய சமூக விரோதிகளையும், அதிகார வர்கத்துடன் கைகோர்த்துக் கொண்டு அரசு அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு அரசின் முறையான அனுமதி இன்றி ஆற்று மணலை லாரி லாரியாக கடத்திய கும்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ.வாக பொறுப்பேற்ற சாந்தி ஒழித்துக் கட்டினார்.
இப்படி 50க்கும் மேற்பட்ட திருட்டு மணல் லாரிகளைப் பிடித்து அபராதம் விதித்து, மணல் கொளளையர்களை திக்குமுக்காட வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 112 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை அறிந்து பல மதுபான கடைகளுக்கு தானே நேரில் சென்று ஆய்வு செய்து மேல் மட்ட அதிகாரிகளுக்கு செல்ல வேண்டிய பல லட்ச ரூபாய் மாமூலலை தடை செய்தார்.