Wednesday, April 25, 2012

முல்லைப் பெரியாறு: சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த ஐவர் குழு


Mullaiperiyar Damடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான 206 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஐவர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து வரும் கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், அணை வலுவாக இருப்பதால் அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு நியமித்தது.

இந்தக் குழு, அணையை சோதனையிட்ட 8 வல்லுனர் குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் இந்தக் குழுவின் இறுதி கட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 22ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், தொழில்நுட்ப நிபுணர்களான தத்தா, மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.

சுமார் 4 மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அணை சுவரில் துளைகளிட்டும், அணையில் நீரின் அடியில் சென்று சேகரிக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியைக் குழுவினர் தொடங்கினர். இந்நிலையில் இறுதி அறிக்கையை அந்த குழு வெற்றிகரமாக தயார் செய்து முடித்து.

இதையடுத்து 206 பக்கங்கள் கொண்ட அறிக்கை சீல் வைத்த கவரில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தங்கள் பதவிக்காலம் முடிய 5 நாட்கள் உள்ள நிலையில் அந்த குழு இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐவர் குழு அளி்ககும் அறி்க்கையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment