Friday, March 9, 2012

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: மின்தடை நேரம் குறைப்பு


Wind Millசெங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி துவங்கியுள்ளதால் மின்வெட்டு நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு பகுதிகளான செங்கோட்டை, சுரண்டை, ஆய்க்குடி, சேர்ந்தமரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 


கடந்த ஒன்றரை மாதமாக போதிய அளவு காற்று இல்லாததால் இப்பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் காற்று வீசத் துவங்கியுள்ளதால் சுமார் 10 மணி நேரமாக இருந்த மி்ன்தடை திடீரென 2 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது,

நல்ல காற்று வீசினால் ஒரு காற்றாலை தினமும் 6,000 யூனிட் மின் உற்பத்தி செய்யும். தற்போது திடீரென அதிகளவு காற்று வீசுவதால் மின்தடை நேரம் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான காற்றாலைகளுக்கும் சீரான காற்று வீசினால் மின் உற்பத்தி அதிகரித்துவிடும். மேலும் மின்தடை என்ற பேச்சுக்கு இடமில்லை. காற்றாலைகள் மூலம் அளவுக்கு அதிகமாக மின்சாரம் கிடைத்தால் அதனை சேமித்து வைக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றார். 

பிளஸ் டூ தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மின்வெட்டு இல்லாததால் மாணவ-மாணவியர் மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் தேர்வை எழுதத் தொடங்கியுள்ளனர். இது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தற்போது பிளஸ்டூ தேர்வு எழுதும் 8 லட்சத்திற்கும் அதிகமான பேர் அடுத்த ஆண்டு வாக்காளர்களாக மாறி விடுவார்கள். அந்த வாக்கு ஆளும்கட்சிக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது என்பதற்காகத் தான் அது இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றனர். 

No comments:

Post a Comment