Sunday, March 11, 2012

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது... இந்தமுறையும் பிரச்சினைகள் புயலைக் கிளப்பும்!


வழக்கம் போல பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.


5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. வழக்கமாக ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும். எனினும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.



பட்ஜெட் கூட்டத் தொடர் 12ம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 16ம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகிறது. அதற்கு முன்பாக 14ந் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. இதன்படி நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது.



நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டத் தொடர் நடைபெறுவதால் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.



இந்த கூட்டத் தொடரின் போது கறுப்பு பண விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் ஆனது. எனினும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. லோக்பால் குறித்த பிரச்சனையும் இந்த கூட்டத் தொடரில் எழுப்பப்படும் என தெரிகிறது.



விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் இதில் விவாதிக்கப்பட உள்ளன. விலைவாசி உயர்வு குறித்து இடதுசாரிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.  நாடாளுமன்றத்தில் இந்த முறை எதிர்க்கட்சிகளுடன் ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இணைந்து செயல்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு நிலவுகிறது. இதை விட பட்ஜெட்டில் என்ன சொல்லப் போகிறார்கள், ரயில் கட்டணம் அதிகமாகுமா என்ற மக்கள் எதிர்பார்ப்புதான் வழக்கம் போல கூடுதலாக உள்ளது.

No comments:

Post a Comment