Friday, March 2, 2012

வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை- சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்


Jayalalitha and Sasikalaடெல்லி: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தான் சொல்லும் வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய வேண்டும், வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஒன்றாகக் கருத முடியாது. ஜெயலலிதாவுக்குத் தரும் சலுகைகளை சசிகலாவும் கோர முடியாது என்றும் நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர்.



பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதா நான்கு நாட்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து முடித்து விட்டார். தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார். தினசரி சராசரியாக 50 கேள்விகள் வரை மட்டுமே அவர் பதிலளித்து வருகிறார்.



இந்த நிலையில், சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையை ஆங்கிலத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதை தமிழில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.



இந்த மனு நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் சசிகலாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் சசிகலாவின் கோரிக்கைளும் நிராகரிக்கப்பட்டன. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஒன்றாக கருத முடியாது. ஜெயலலிதாவுக்கு அளிக்கும் சலுகைகளை சசிகலாவும் கோர முடியாது என்று தெரிவித்தனர்.



மேலும் பெங்களூர் நீதிமன்றத்தில் 72 கேள்விகளுக்கு பதில் அளிக்க 4 நாட்கள் சசிகலா எடுத்துக் கொண்டதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.



7வது நாளாக விசாரணை



இதற்கிடையே, சசிகலாவிடம் பெங்களூர் கோர்ட்டில் இன்று 7வது நாளாக விசாரணை தொடர்ந்து வருகிறது. இன்னும் அவரிடம் 1000 கேள்விகள் வரை கேட்க வேண்டியுள்ளதாம். தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 50 கேள்விகள் வரைதான் சசிகலா பதிலளித்து வருகிறார். இதனால் மேலும் பல நாட்களுக்கு சசிகலாவிடம் வாக்குமூலம் பெற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment