Friday, March 9, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய பொதுச் செயலாளருமான பாத்திமா முசாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சங்கரன்கோவில் தொகுதி இதுவரை அதிமுகவின் கோட்டையாகவும், காலம் சென்ற முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த வீடாகவும் உள்ளது. இந்த தொகுதியில் பல கட்சிகள் போட்டி போட்டாலும் இறுதி வெற்றி அதிமுகவுக்கு தான்.



தமிழகத்தில் நிலவும் மின்வெட்டையும், விலைவாசி உயர்வையும் காரணம் காட்டியும், தங்கள் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தியும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளன. முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மின் தட்டுப்பாடு நீங்கிவிடும். முதல்வர் ஜெயலிலதா ஆட்சியில் அமர்ந்தவுடன் வக்பு வாரியத்திற்கும், ஹஜ் கமிட்டிக்கும் நிதி ஒதுக்கீடு செய்ததோடு தமிழக ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்த்தினார்.



இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல நல்ல திட்டங்களை செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தப்போவதாக உறுதியளித்துள்ளார். மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களையும் மீட்டுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை மேலும் வலுவூட்டும் வகையில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment