Saturday, February 11, 2012

ஷரீஅத்:அரசியல் சட்ட திருத்தத்திற்கு முயற்சிப்போம் – குவைத் இஸ்லாமிஸ்டுகள்

குவைத் சிட்டி:குவைத்தின் ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் அடிப்படையில் அமையும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த முயற்சிப்போம் என பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள இஸ்லாமியவாதிகள் அறிவித்துள்ளனர். நேற்று முன் தினம் நடந்த இஸ்லாமியவாதிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஹாயிஃப் அறிவித்துள்ளார்.

“இஸ்லாமே சட்ட நிர்ணயத்தின் முக்கிய அடிப்படை” என்ற அரசியல் சட்டத்தின் 2-வது பிரிவை “இஸ்லாம் மட்டுமே சட்டநிர்ணயத்தின் அடிப்படை” என திருத்தம் செய்ய முயற்சிப்போம் என இஸ்லாமியவாதிகள் கூறுகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் இந்த சட்ட திருத்தம் நிறைவேற வாய்ப்பு குறைவாகும்.
50 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் இஸ்லாமியவாதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். ஆனால், அரசியல் சட்டத்தை திருத்த 3இல் இரண்டு பகுதி ஆதரவு தேவை. 13 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை அமுலுக்கு வரும் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 63 ஆகும். அவ்வேளையில் இஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பான்மை இருந்தாலும், 3-இல் 2 பகுதி ஆதரவு கிடைப்பது கடினமே. மேலும் பாராளுமன்றம் சட்ட திருத்தத்தை நிறைவேற்றினாலும், குவைத் அமீர் கையெழுத்திட்டால் தான் சட்ட திருத்தம் அமுலுக்கு வரும். இப்பிரச்சனைகள் இஸ்லாமிய வாதிகளின் நல்லெண்ணத்திற்கு தடையாக மாறும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment