Sunday, February 19, 2012

மத்தியதரைக்கடல் பகுதியில் ஈரான் கப்பல்கள் விரைகின்றன. போர்ப்பதட்டம் அதிகரிப்பு !


ஈரானின் போர்க் கப்பல்கள், சூயஸ் கால்வாயைக் கடந்து, மத்திய தரைக் கடலுக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், "ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில், பனிப் போரை உருவாக்கும்' என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார்.


இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள், ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில், ஈரான் இருப்பதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இந் நிலையில், ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ., செய்தி நிறுவனம், நேற்று வெளியிட்ட செய்தியில், அந்நாட்டின் ஷாகித் காண்டி மற்றும் கார்க் ஆகிய போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய கடற்படைத் தளபதி ஹபீபுல்லா சயாரி இது குறித்துக் கூறுகையில், "1979ல் ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின், 2 வது முறையாக ஈரான் போர்க் கப்பல்கள், மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளன. இந்த நடவடிக்கை, அண்டை நாடுகளுக்கு ஈரானின் வலிமை, நட்பு மற்றும் அமைதி விருப்பத்தை வெளிக்காட்டும்' என்றார். எனினும் எத்தனை கப்பல்கள், மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளன என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து, நேற்று பேட்டியளித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக், "ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் துவங்கினால், மத்திய ஆசியாவில் பிற நாடுகளும் அதற்கு ஆசைப்படும். இதனால், அந்த மண்டலத்தில் பனிப் போர் ஏற்படும்' என்றார்.

No comments:

Post a Comment