Monday, February 6, 2012

ஃபேஸ்புக்கிற்கு வயது 8 !

ஹூஸ்டன்:இணையதள நட்புறவு தளங்களில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள பிரபல சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு எட்டு வயது பூர்த்தியாகிறது. இந்த எட்டு வருட காலக்கட்டத்தில் விவாதங்கள், புரட்சிகள், உண்மையை வெளிக்கொணரல், நட்புறவின் மறக்கமுடியாத நிமிடங்கள் போன்றவற்றை இந்த நட்புறவு தளம் மூலமாக உலகம் பகிர்ந்துகொண்டது.

‘பலரும், பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் பொது இடம்’ என்ற கொள்கையுடன் இந்த இணையதளத்தை துவக்கிய மார்க் ஸக்கர்பர்க் என்ற ஃபேஸ்புக்கின் சிற்பி கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார் இவ்வளவு தூரம் ஃபேஸ்புக் பிரபலமாகும் என.
2004 பிப்ரவரி நான்காம் தேதி ஃபேஸ்புக் செயல்பட துவங்கியது. அன்று முதல் வயது வித்தியாசம் பாராமல் உலக நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் இதில் உறுப்பினர்களாக மாறினர். தற்போது 84.5 கோடி பேர் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களாக உள்ளனர்.
கருத்து சுதந்திரம் தடைச் செய்யப்பட்ட நாடுகளில் ஃபேஸ்புக்கின் வருகை மிகுந்த பயனாக மாறியது. அரபு வசந்தம் தீவிரமடைய ஃபேஸ்புக்கும் முக்கிய பங்கினை வகித்தது.
ஹார்வர்ட் பல்கலை கழக மாணவர்களான மார்க் ஸக்கர்பர்க், எட்வர்டோ ஸவெரின், டஸ்டின் மோஸ்கோவிட்ஸ், கிறிஸ் ஹியூக் ஆகியோர் ஃபேஸ்புக்கின் ஸ்தாபகர்கள் ஆவர். மார்க் ஸக்கர்பர்க் ஃபேஸ்புக்கின் சீஃப் எக்ஸ்க்யூடிவ் ஆபீஸர்(சி.இ.ஒ).
ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் ஃபேஸ்புக் பிறந்தாலும், இதர பல்கலை கழகங்களுக்கும் இது பரவியது. துவக்கத்தில் த ஃபேஸ்புக் டாட் காம் என பெயரிடப்பட்டது. 2008 பிப்ரவரி 4-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரபலமான ஃபேஸ்புக்காக உருவெடுத்தது. காம்பிட் டாட் காம் 2009-ஆம் ஆண்டு நடத்திய சர்வேயில் உலகம் முழுவதும் அதிகமாக உபயோகிக்கும் சோசியல் நெட்வர்கிங் இணையதளம் ஃபேஸ்புக் ஆகும்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக், இந்தியாவில் 132 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி அமெரிக்க பங்கு சந்தையில் நுழையும் திட்டம் குறித்து மார்க் ஸக்கர்பர்க் அறிவிப்பை வெளியிட்டார்.

No comments:

Post a Comment