Wednesday, September 4, 2013

‘குஜராத் அரசின் கொள்கையைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம்!’ - போலி என்கவுண்டர் போலீஸ் அதிகாரி டிஜி வன்சரா மோடி மீது குற்றச்சாட்டு!

குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரி டிஜி வன்சரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார். இக்கடிதத்தை குஜராத் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு வன்சரா அனுப்பியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியில் சுமார் இருபதுக்கும் மேற்ப்பட்ட போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன. குஜராத் போலீஸால் போலி என்கவுண்ட்டரில் சொராஹ்புதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மனைவியும், என்கவுண்டர் சாட்சியான பிரஜாபதி ஆகியோரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இது போல் மேலும் சில போலி என்கவுண்ட்டர்கள் நடந்ததும் தெரியவந்தது. இந்த போலி என்கவுண்ட்டர்கள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
குஜராத்தில் நடந்த 4 போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பான வழக்குகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 32 போலீசார் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒருவர் குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான டி.ஜி வன்சாரா ஆவார். சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கு தொடர்பாக வன்சாரா கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கைது செய்யப்பட்டார். சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர், கடந்த 6 ஆண்டுகளில் இஷ்ரத் ஜஹான் மற்றும் அவருடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட மூவரின் போலி என்கவுண்டர் வழக்கு மேலும் சில போலி என்கவுண்ட்டர் வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். டிஜி வன்சாரா, முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் வன்சரா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அவர், தனது 10 பக்க ராஜினாமா கடிதத்தை குஜராத் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
அதில், நரேந்திர மோடி மீதும், அவரது அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். மேலும் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், குஜராத் உள்துறை மந்திரியாக இருந்தவருமான அமித் ஷாவையும் அவர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
‘அரசின் கொள்கையைத்தான் போலீஸ் அதிகாரிகள் செயல்படுத்தியதாகவும், அதன் காரணமாக கைதாகி தற்போது சிறையில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளை குஜராத் அரசு பாதுகாக்க தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மோடியை கடவுள் போல் கருதியதாகவும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்ததால்தான் இவ்வளவு நாளும் அமைதி காத்ததாகவும் கடிதத்தில் வன்சாரா குறிப்பிட்டு உள்ளார். நரேந்திர மோடியை அமித் ஷா தவறாக வழிநடத்தியதாகவும் அவர் கூறி உள்ளார்.
போலி என்கவுண்ட்டர்களுக்காக போலீஸ்காரர்களை சிறையில் அடைக்க முடியும் என்றால், அந்த என்கவுண்ட்டர்களுக்கு காரணமான அரசாங்கத்தில் இருப்பவர்கள் நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறையிலோ அல்லது அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையிலோதான் இருக்கவேண்டும் என்றும் வன்சாரா தனது கடிதத்தில் கூறி உள்ளார்.
மோடி அரசு மீது போலீஸ் அதிகாரி வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்; குஜராத் மாநில அரசு தனது அதிகாரிகளை எந்த அளவுக்கு தவறாக நடத்துகிறது என்பது வன்சாராவின் ராஜினாமா கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது என்றும், போலி என்கவுண்ட்டர் பற்றி சி.பி.ஐ. ஏற்கனவே விசாரித்து வருவதால் உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் வன்சராவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குஜராத் மாநில பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஜெய் நாராயண் வியாஸ் கூறுகையில்; டிஜி வன்சாரா இப்படி கூறி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றும், சிறையில் இருக்கும் அவர் கோபத்திலும் விரக்தியிலும் இவ்வாறு கூறி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வன்சாரா இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அவரது ராஜினாமா ஒரு பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment