22 Oct 2011
துபாய்:சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) அகில இந்திய தலைவர் இ.அபூபக்கர் அவர்களின் அமீரக வரவையொட்டி அவருக்கு கடந்த 21.10.11 வெள்ளியன்று மாபெரும் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த விழா அல் கிஸைஸில் கல்ஃப் மாடல் ஸ்கூலில் நடைபெற்றது.
EIFFன் அமீரகத் தலைவர் நாஸர் ஹுசைன் (கர்நாடகா) அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
இரவு 7 மணியளவில் துவங்கிய இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சகோ.அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் இ.அபூபக்கர் அவர்களையும், அவருடன் வந்திருந்த SDPI-ன் தேசிய பொதுச் செயலாளர்கள் ஹாஃபிஸ் மன்சூர் அலீ கான், முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி ஆகியோரையும், கலந்துகொண்ட அனைவரையும் அவர் வரவேற்றுப் பேசினார்.
அடுத்ததாக, EIFFன் அமீரகத் தலைவர் நாஸர் ஹுசைன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அதன்பிறகு SDPIன் தேசிய பொதுச் செயலாளர் முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர். அடுத்த மாதம் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெறவிருக்கும் மாபெரும் சமூக நீதி மாநாடு குறித்து அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சமூக நீதி மாநாடு நடத்தப்படுவதற்கான காரணத்தை விலாவாரியாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் தலித்துகளும், சிறுபான்மையினரும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாவதைக் கூறினார். மேலும் அவர் குறிப்பிட்ட சமூகங்களுக்கெதிராக அரசு இயந்திரங்கள் இயங்கி வருவதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.
அடுத்ததாக, SDPIன் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலீ கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் குறிப்பிட்ட அவர், அநீதம் இழைக்கப்படும் சமூகங்களுக்கு நீதி வழங்க வேண்டியே இந்தச் சமூக நீதி மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்துகிறது என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாக, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) அகில இந்திய தலைவருமான இ.அபூபக்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கோவை, நெல்லை ஆகிய கார்ப்பரேஷன் வார்டுகளில் தலா ஒரு இடம் உட்பட SDPI கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தனது உரையின் துவக்கத்தில் அவர் கூறினார்.
வட இந்தியாவில் முஸ்லிம்களும், இதர பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின மக்களும் அனுபவித்து வரும் துன்பங்களைக் குறிப்பிட்டார் அவர். இராஜஸ்தானில் உள்ள மேவாத்தி முஸ்லிம்களிடம் சென்றிருந்த பொழுது ஒரு முதியவர் தன் கையைப் பிடித்து, “நாங்கள் 63 வருடங்களாக உங்களுககாகத்தான் காத்திருந்தோம்” என்று நெகிழ்வுடன் கூறியதை நினைவு கூர்ந்தார்.