சென்னை: செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிப்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில், 2007ம் ஆண்டில் 16 ஆயுள்தண்டனை கைதிகளும், 2008ம் ஆண்டில் 1405 ஆயுள்தண்டனை கைதிகளும், 2009ம் ஆண்டில் 10 ஆயுள்தண்டனை கைதிகளும், 2010ம் ஆண்டில் 13 ஆயுள்தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 1992ல் 230 ஆயுள்தண்டனை கைதிகளும், 1993ல் 132 ஆயுள்தண்டனை கைதிகளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





